புத்தரின் நிழல்


வீட்டு வரவேற்பறையில்

புத்தர் சிலை முன்

ஏற்றப்படும் தீபத்தின் கைங்கரியம்.

அறையிருட்டில்

புத்தர்

உயிர் பெற்று

விஸ்வரூபமெடுக்கிறார்.

இலேசான காற்றில்

தீபச்சுடர் ஆடுகையில்

புத்தரின் நிழல்

தலையசைத்து

மௌனப்பிரவசனம்

செய்வதாக தோன்றும் எனக்கு.

மின்வெட்டு முடிந்து

வெளிச்சம் திரும்பினால்

அசையும் நிழல் புத்தர் மறைந்து விடுகிறார்.

புத்தர் சிலை மட்டும் வீற்றிருக்கும்.

புத்தர் மீண்டும் உயிர் பெற

இருட்டுக்காக காத்திருக்க வேண்டும்

நன்றி : நவீனவிருட்சம் http://navinavirutcham.blogspot.in/2012/04/blog-post.html

முதல் மலர்


கிளை நட்டு

நீரூற்றி

களை பிடுங்கி

மருந்தடித்து

பாட்டு பாடி

பொறுமை காத்து……

வெகு நாளுக்குப் பிறகு

பூத்த மலரை

கையில் ஏந்தி பார்க்கையில்

இரு இதழ்கள் அளவு குறைந்தும்

ஒரிதழ் அளவு பெரிதுமாய் நீண்டு

விகாரமாக இருந்தது.

எனினும்

என் மலரை

பெருமையுடன் சட்டையில் குத்திக்கொண்டேன்.

ஒரு கிளைக்கதை

வில் வித்தையில் தன் மானசீக குருவாக நினைத்திருந்த துரோணர் தன்னை சீடனாக ஏற்க மறுத்ததால் விரக்தியில் கொஞ்ச காலம் அலைந்து கொண்டிருந்த பிறகு, ஏகலைவனுக்கு ஒர் எண்ணம் பிறந்தது. துரோணர் என்ன துரோணர் ? அவர் மட்டும் தான் குருவா? கல்வித்துறையில் அரசு செய்த மாறுதல்களுக்கு பிறகு வீதிக்கு வீதி வில் வித்தை கற்றுத்தரும் தனியார் பள்ளிகள் முளைத்து விட்டனவே? அவற்றில் ஏதாவது ஒன்றில் போய் சேர்ந்து விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தான் ஏகலைவன். தனியார் பள்ளியில் சேர கொஞ்சம் நிதி பற்றாக்குறை. குபேரன் நடத்திய வங்கியில் தேவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்ட காரணத்தாலும், வேடுவர்களுக்கென வங்கியெதுவும் நிறுவப்படாததாலும் யாரிடம் கடன் வாங்குவதென்று தெரியவில்லை. ரிசர்வேஷன் காரணமாக துரோணரின் பள்ளியில் கற்க முடியவில்லை. அக்ரெடிட் பண்ணப்படாத தனியார் பள்ளிகளோ பகல் கொள்ளைக்காரர்களென லூட் செய்கிறார்களே! நிராசையுற்ற ஏகலைவன் ஜென்டில் மேன் அர்ஜுனிடமிருந்து தொழில் கற்றுக்கொண்டு, கொள்ளையடிக்க ஆரம்பித்தான்.

இந்திரப்பிரஸ்தத்தை தலைநகராகக்கொண்டு பாண்டவர்கள் ஆண்டுகொண்டிருந்த பகுதிகளிலேயே தன் கைவேலையை காட்டி நிறைய செல்வம் சேர்த்தான். வில்லுக்கு விசயன் என்று போற்றப்பட்டு வந்த அர்ஜுனனின் இருபதாவது மனைவியின் தந்தையார் வீட்டில் ஏகலைவன் ஒருமுறை கன்னமிட்டு கொள்ளையடித்த போது வெஞ்சினம் கொண்டான் அர்ஜுனன். ஏகலைவனை கைது செய்ய ஒரு சிறப்புப்படை அமைக்கப்பெற்றது ; அர்ஜுனனே அதன் போறுப்பேற்றுக்கொண்டான்.

ஏகலைவனின் பினாமியாக இருந்தவன் ஒரு பாஞ்சால நாட்டான். பத்து தனியார் பள்ளிகளை லம்ப்-பாக வாங்கினான். ஏகலைவன் தான் வாங்கிய பள்ளிகளில் இலவசக்கல்வி தரப்படவேண்டும் என்று சொல்லப்போக – "ஜென்டில்மேன் உதவி செய்தார் என்பதற்காக, அதே இயக்குனர் தந்த சிவாஜி பாதையில் போக வேண்டும் என்று அவசியமில்லை. நமக்கும் ரிடர்ன்ஸ் வேண்டாமா?" என்று சொல்லி கன்வின்ஸ் செய்தான்.

கல்வித்துறையில் மோனோபொலி உருவாகிவருவதை கண்ணுற்ற துரோணர் (இப்போது, பாண்டவநாட்டு அரசு கல்வித்துறைக்கு சிறப்பு ஆலோசகராக பார்ட்-டைம் செய்து வந்தார்), தருமரிடம் அதைப்பற்றி ப்ரஸ்தாபித்து, "மோனோபோலிஸ்டிக் டென்டென்சி சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தீங்குகள்" என்ற தலைப்பில் பவர் பாயிண்ட் ப்ரசென்டேஷன் செய்தார். சில நாட்களில் ஒர் அவசரச்சட்டம் பிரகடனப்படுத்தி, தனியார் பள்ளிகள் எல்லாம் லைசென்ஸ் பெறுதல் அவசியம் என்றானது. பாஞ்சால நாட்டு பினாமி துவாரகையில் இருந்து ஒரு அரசியல் தரகனை தன் ஆலோசகனாய் நியமித்து உரிமம் பெற முயன்றான்.

பாண்டவர்களின் புதுமையான சட்டத்தை கௌரவர்கள் காப்பியடித்து தங்கள் நாட்டினிலும் அமல் படுத்தினார்கள். ஏற்கெனவே அதிகம் பள்ளிகள் இல்லாமல் அறியாமையின் பீடியில் சிக்கியிருந்த கௌரவ நாட்டுக்கு இச்சட்டம் சரி வராது என்று விதுரர் சபையில் உரையாற்றினார். துரோணர் தான் மோனோபோலிஸ்டிக் கொள்கையை நிலைநிறுத்தி வருகிறார் என்றும் பாண்டவ நாட்டுக்கு அரசாங்க கஜானாவை நிரப்பித்தரும் சட்டங்களை இயற்றித்தந்து, கௌரவ நாட்டை மட்டும் இலட்சிய வாத சங்கிலிகளில் துரோணர் பூட்டுகிறார் என்றும் சகுனி குற்றம் சாட்டினார். துரோணர் தன் குடும்பத்துடன் மலைவாசஸ்தலமொன்று சென்றிருக்கிறார் என்றபடியால், எழுப்பப்பட்ட வாதங்களுக்கு பின்னர் பதிலளிப்பார் என கூறி விவாதத்தை முடிவு செய்தார் திரிதராஷ்டிரர்.

துரியோதனனின் அதிகாரியொருவன் ஏகலைவனின் பினாமியை அஸ்தினாபுரம் அழைத்து விருந்தளித்தான். கௌரவ நாடு அன்னிய முதலீடுகளை வரவேற்பதாகவும், பள்ளிக்கூடங்கள் நிறுவ இலவசமாக இடம் ஒதுக்கி தரப்படும் என்று ஃப்ரி-பைஸ்களை அடுக்கிகொண்டு போக, 25 பள்ளிகளை ஸ்தாபிக்க எம் ஒ யூ கைசாத்திடப்பட்டது. துரியோதனனுக்கு கிக்-பேக்காக 5% வழங்கப்படுமென்றும் பாஞ்சால நாட்டான் ஒப்புக்கொண்டான்.

அர்ஜுனனின் சிறப்புப்படையால் ஜென்டில்மேன் ஏகலைவனை பிடிக்கமுடியவில்லை. அவன் எங்கிருக்கிறான் என்றொ, எப்படி இருப்பான் என்றோ யாரும் அறிந்திருக்கவில்லை. “ஒட்டகத்தை கட்டிக்கோ” என்ற கீர்த்தனை பாடிக்கொண்டிருந்த பாகவதர் ஒருவர் மதுராவிலிருந்து கடத்தப்பட்டிருக்கிறார் என்ற புகாரின் பேரில் விசாரணைக்கு வர, அவரிருக்கும் போதே மதுராவிலுள்ள கோவிலில் இருந்து உண்டியலை காலி செய்தான் ஏகலைவன். அவனுக்கு துணையாக கவுடமணியென்பவன் வந்தான் என்றும் பின்னர் விசாரணை மூலம் தெரிய வந்தது. அர்ஜுனன் ஏகலைவனை பிடிக்கும் வரை முடிவளர்க்கப்போவதில்லை என சூளுரைத்து மொட்டையடித்துக்கொண்டான். அவன் வீடு திரும்பியதும் “பேன் இருப்பது தெரியாமல் ஒட்டடை மாதிரி வழிந்த முடியை எத்தனை முறை வெட்டும்படி நான் சொல்லும் போதும் மகாபாரத தோனி நான் என்று உளறிக்கொட்டி என் தலைக்கும் பேனை தானமாக தந்தீரே, நல்ல வேளை இப்போதாவது புத்தி வந்ததே!” என்று சந்தோஷம் கொண்டாள் சுபத்திரை. திரௌபதியோ “நல்ல வேளை இப்போது நகுலனின் டர்ன்…அர்ஜுனனின் சான்ஸ் வர இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன.” என்று ஆசுவாசம் கொண்டாள்.

கௌரவ நாட்டுக்கு தனியார் பள்ளிகள் வந்து ஒரு அறிவுப்புரட்சியை ஏற்படுத்தின. பள்ளிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை ஆல்-டைம் ஹை ஆனது. புதுமையான மார்க்கெட்டிங் டெக்னிக்குகள், சுலப தவணை திட்டங்கள், காற்றோட்டமான அறைகள் – இவற்றின் காரணங்களால் ஏகலைவனின் பினாமியின் பள்ளிகள் கொழித்தன. இவ்வளவு ஏன், துரோணரின் பள்ளியில் படிக்கும் ராஜ குமாரர்கள் கூட இப்போது தனியார் பள்ளிகளை விரும்பினர். காட்டிலும், வெயிலிலும் ப்ராக்டிஸ் பண்ண வேண்டியதில்லை. அறைகளிலேயே, ஹெல்மெட், கவச ஆடைகள் அணிந்து பயிற்சி செய்யக்கூடியதாக இருந்தது. துரோணரின் பள்ளி மூட வேண்டிய நிலைமைக்கு வந்தது. அசுவத்தாமா துரோணரிடம் சென்று முறையிட்டான். துரோணர், சிறப்புப்படையில் பணியாற்றிய ஒற்றன் ஒருவனின் உதவியுடன் ஏகலைவனின் அப்பாயிண்ட்மென்ட் வாங்கி ராஜபாட்டையின் தாபாவொன்றில் சந்தித்தார்.

இரகசிய சந்திப்பிற்கு பிறகு நடந்தவை :-

(!) ஏகலைவன் தன் பள்ளியில் சேர முயன்ற போது ரிசர்வேஷன் மூலம் துரோணர் இடம் தர மறுத்ததாலேயே அவன் ஜென்டில்மேனாக மாறியதை அறிந்தவுடன் அசுவத்தமா வெகுண்டெழுந்து சொன்னான் “அவன் ஒரு சீட் கேட்டான் ; கொடுத்திருக்கலாம். நீங்கள் தரவில்லை. இன்னைக்கி பாண்டவ நாடு, கௌரவ நாடு – இரண்டு நாடுகளிலும் பள்ளிகளை நிறுவி, சாதாரணமா இருந்தவனை சூப்பர் ஸ்டாராக்கி விட்டுட்டீங்க. எதிரிங்க தானா உருவாறதில்லைங்க..நாமதான் உருவாக்கறோம்”

(2) துரோணர் கை கட்டை விரலை இழந்திருந்தார். தாபா மீட்டிங்கில் வெண்ணெய் வெட்டும் கத்தி தொலைந்து போனது ; ஏகலைவன் வெண்ணெய் நான் வெட்டித்தருகிறேன் என்று உதவ வரும் வேளையில் திடீரென்று பவர்-ஆஃப் ஆக தவறுதலாக துரோணரின் கை விரல் வெட்டுபட்டது.

(3) ஏகலைவனின் பினாமிக்கும் துரியோதனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கல்வி அமைச்சர் சகுனி பள்ளி லைசென்ஸ்களை கான்சல் செய்ய உத்தரவிட்டார். துரோணரின் பள்ளி வழக்கம் போல் மீண்டும் முண்ணனி பெற்றது. அசுவத்தாமாவிற்கும் சகுனிக்கும் இடையில் ஏதொ ஒர் அமைதியான புரிந்துணர்வு இருப்பதாக பேசிக்கொண்டனர்.

(4) ஏகலைவனின் ராபின்ஹூட் தன கொள்ளைகள் முடிவுக்கு வந்தன. அவன் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பாண்டவர்கள் காட்டிற்கு செல்ல வேண்டி நேரிட்டதால், ஏகலைவனின் கேஸ் பிசுபிசுத்து போய்விட்டதாக மக்கள் பேசிக்கோண்டனர். ஏகலைவன் மீது ஆக்‌ஷன் எடுக்கப்படாததற்கு துரோணரின் திரைக்கு பின்னரான நடவடிக்கைகளே காரணம் என்றும் சில சாரார் சொன்னார்கள். எது உண்மை என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

(5) ஏகலைவனின் சம்மர் ரிசார்ட் ஒன்றில் துரோணரின் கட்டை விரல் ஃபார்மால்டிஹைட் சொல்யுஷனில் ப்ரிசெர்வ் செய்யப்பட்டு வெகுகாலம் காட்சிப்பொருளாய் இருந்தது.

(6) ஏகலைவன் பினாமி பாண்டவர்களின் ஃபைனான்சியர் ஆனான் என்றும் சொல்வார்கள்.

(7) அர்ஜுனன் காட்டுக்கு கிளம்புகையில் ஸ்பெஷலாக மொட்டையடிக்க தேவைப்படவில்லை. ஏற்கெனவே ஏகலைவனை கைது செய்வதாய் சபதமிட்டு மொட்டையடித்திருந்தபடியால் கொஞ்சம் ட்ரிம் மட்டுமே செய்ய வேண்டியிருந்தது. மற்ற பாண்டவ சகோதரர்களுக்கு மட்டும் ஃபுல்-ஃப்லெட்ஜ் மொட்டையடித்துக்கொண்டார்கள்.

நம்பிக்கையின் சிருஷ்டி

முதலில் நம்பிக்கை என்ற சிந்தனை

பின்னர். நம்புங்கள் என்ற சொல்

நம்பினார்கள் பலர்

ஏன் நம்பவேண்டும் என்று ஆய்ந்தனர் சிலர்

ஆய்ந்தவர்களில்

சில பேர் நம்பத்தொடங்கினர்

சில பேர் நம்பத்தேவையில்லை என்றனர்

மற்றவர்கள் இன்னும் ஆய்வைத் தொடர்கின்றனர்

நம்புதலும் நம்பாதிருத்தலும்

நம்புதல் பற்றிய ஆய்வும் என்று

செய்கைகளே மிஞ்சின.

உலகளாவிய பெருமனத்தின்

ஒன்றிணைந்த சிந்தனை, சொல் மற்றும் செய்கைகள்

சிருஷ்டியின் மூலக்கூறுகள் எனில்

நம்பிக்கையின் சிருஷ்டியும் இவ்வாறே நிகழ்ந்திருக்கக்கூடும்.

தவளைக்கு சிக்கிய மீன் – ந பெரியசாமி

ஹோசூரில் வசிக்கும் கவிஞர் ந பெரியசாமி – என் நண்பரும் கூட – பரவலாக பல இணைய இதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார், நவீன விருட்சம், பண்புடன், வல்லினம், திண்ணை – முக்கியமான எல்லா இதழ்களிலும் இவரது படைப்புகள் வந்திருக்கின்றன. அவர் எழுதியவற்றில் என்னை மிகவும் கவர்ந்த இரு கவிதைகளை கீழே பதிவிடுகின்றேன். பெரியசாமியின் வலைதள சுட்டி : http :// naperiyasamy.blogspot.com

தவளைக்கு சிக்கிய மீன்

குளக்கரையிலிருந்து தவளை
நீர் அதிர
சிரித்தது சிக்கிய மீன்
எனை பிடித்தென் செய்வாய்?
ஏளனம் தரையில் வழிந்தது
மனித வசிப்பிட சிறையிலடைப்பேன்
அங்கு உன் பெயர் தொட்டிமீன்
சிறார்கள் உணவிடுவார்கள்
தாளில்
பிறப்பித்த மீனை
துணைக்கு மிதக்கச் செய்வர்
கழிவில் கசடான நீரை
மறவாது மாற்றம் செய்வர்
உனது வளர்ச்சிக்கு உண்டங்கு ஊசி
பெருமையின் அடையாளமாவாய்
வந்துபோவோரெல்லாம் வேடிக்கையில் மகிழ்வர்
ஒளிரூட்டி கதகதப்பாக்குவார்கள்
ஒத்துப்போக ஓடித்திரியலாம்
முரண்கொள்ள செத்து மிதப்பாய்
வீசி எறிய வேரொன்று இடம் நிரப்பும்
என்றாவது விடுவிக்கவும்படலாம்
வதை என்பதறியும் சிசு அவதரிக்க…

கசப்பு

சோம்பிக் கிடந்த குழாயிலிருந்து
மழையை வரவழைத்துக்
கழுவிய இரு பாகற்காயை
துண்டாடினேன்
அலுப்பூட்ட விரும்பவில்லை
பொன்நிறமாகிட
வதக்கினேன்
சுவையறிய சிறுதுண்டை
நாக்கிலிட்டேன்
ஊறி ஊறி வழிந்த எச்சில்கள்
உடலுள் வளர்த்தது
ஒரு வேப்பமரத்தை

காலைத் தேனீர் – கவிஞர் றியாஸ் குரானா

நண்பர் றியாஸ் குரானாவின் கவிதைகள் ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு அர்த்த தளத்திற்கு இட்டுச்செல்லும் வல்லமை பொருந்தியவை. சமீபத்தில் அவருடைய வலைதளத்தில் (http : maatrupirathi.blogspot.com) கீழ்க்கண்ட கவிதையை படித்து மிகவும் ரசித்தேன். 

காலைத் தேனீர்

றியாஸ் குரானா

காலாவதியாகிப்போன நாளொன்றின்
காலைப் பொழுதிற்காக
காத்திருக்கிறேன்.

கடந்தது மீள வராது

ஆயினும்
நான் சந்தித்தேயாக வேண்டும்

அந்திப் பொழுதிலிருந்து
பின்நோக்கி நடக்கிறேன்

அல்லது சிந்திக்கிறேன்

கொஞ்ச நேரம்
எதுவும் தெரியவேயில்லை

அது எனது பகல் தூக்கம்

பின்னோக்கி வருவதுபோல்
பாவனை செய்தபோதும்
திடுக்கிட்டு எழுந்துவிட்டேன்

;காரணம்

கனவில் அவள் தந்த கடிதத்தை
வாங்கிச் செல்கிறாள்

அதுபோல இருந்தது

அதுதான் நிகழ்ந்தது

பின்னோக்கி வரும்போது
தந்தது வாங்கியதாக மாறிவிடும் அல்லவா

மன்னியுங்கள்
மீண்டும் சிந்திக்கலாம்

உச்சி வெயில்

சூட்டை அதிகரிக்கும்
ஆடைகளை உடுத்துகிறேன்

நிலத்தினுள் இறங்கிவிட்ட,
நான் குளித்த நீரையெல்லாம்
கிணற்றுக்குள் ஊற்றுகிறேன்

தலைமயிர்களுக்குள் தங்கிய ஈரமும்
வடித்தெடுக்கப்படுகிறது

சந்தையிலிருந்த மிகவேகமாக
சைக்கிளை பின்நோக்கிச் செலுத்துகிறேன்

எல்லோரும் என்னை அதிசயமாகப் பார்த்தபடி
முன்னோக்கிச் சென்றுகொன்டிருக்கின்றனர்

ஏனெனில், அவர்கள்
கடந்துபோன காலைப்பொழுதை சந்திக்கும்
முயற்ச்சியில் இறங்கவில்லை

முதல்முறை சந்தைக்கு போகும்போது
நானும் அவனும்
அருகருகே பேசிக்கொண்டு போனோம்

இப்போது நாங்கள் தனியே பேசிக்கொண்டு
அவன் முன்னோக்கியும்
நான் பின்நோக்கியும் விரைகிறோம்

சரியாக வீட்டில் வந்து நின்றது

பறவைகளின் ஒலிகள்
வெளியில் பரபரப்பாக இருக்கின்றன

தற்போது காலைப்பொழுது

இனி முன்னோக்கிப் பயணிக்கலாம்

ஆவிபறக்க
தேனீர் அருந்திக் கொண்டிருக்கிறேன்

இந்தத் தேனீரைத்
தவறவிட்டதனால்,

ஒரு பகற்பொழுதை
முன்னோக்கியும் பின்னோக்கியும்
கடந்துசெல்ல வேண்டிவந்தது

இரண்டுமுறை.

நன்றி : றியாஸ் குரானா

சுட்டி : http://maatrupirathi.blogspot.in/2012/03/blog-post.html

நவயுகக்காதலர்கள்

மற்றவர்கள் குழுமியிருந்தபோது
அக்கறையுடன் நலம் விசாரித்தான்.
தனித்துவிடப்பட்டபோது
மௌனமாயிருந்து அன்னியமானான்.
இவனை பேசவைக்க
சற்றுமுன் கூட்டமாய்
நின்றிருந்த நண்பர்களை
மீளச்சொல்ல வேண்டும்

திரைப்படம் சென்றோம்
நண்பர் குழாமுடன்.
அவனுக்கு
படம் பிடிக்கவில்லையாம்.
எனக்கும் பிடிக்கவில்லை
அவன் என் பக்கத்து இருக்கையில்
அமராதது!

எல்லோரும்
விடுதியில்
அளவின்றி உண்டு மகிழ
இவன்
குளிர் பானம் மட்டும்
போதுமென்றான்.
நான் தந்த
சிக்கன் துண்டுகளை கூட
நண்பனுக்கீந்தான்.

நண்பர் குழுவுடன்
என் வீடு வரை
வந்தெனை இறக்கிவிட்டபோது
அவன்
இருந்த திசை நோக்காமல்
முதுகு காட்டி நடந்தேன்.

+++++
அவசரத்தில்
மறந்து போய்
வைத்துவிட்ட கைத்தொலைபேசி
புத்தக அலமாரியில்
புதைந்து கிடந்தது.
முப்பது குறுஞ்செய்திகள்
அவனிடமிருந்து.
சினம் விலகி
உடன் பதிலளிக்கலானாள்.
விரல் வலிக்க
இரவு முழுக்க
அவனை காதலித்தாள்
குறுஞ்செய்தி வாயிலாக.

புலம்பெயர்வு

வீட்டின் பின்புறம் இருந்த பூந்தொட்டிகளுக்கு நீருற்றிக்கொண்டிருந்தாள் ரிவோலி. சனிக்கிழமை மதியம். சாம்பல் நிறவானம். நவம்பர் மாதத்தில் மஞ்சள் நிறவானத்தை பார்ப்பது அபூர்வம். பொதுவாக சனிக்கிழமை ரிவோலியின் வீட்டில் அவளுடைய மாணவர்கள் வருவது வழக்கம். இன்று யாரும் வரவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தோட்டத்தில் உலாத்திக்கொண்டிருந்தாள்.

பக்கத்து பங்களாக்காரர்கள் உறங்கிக்கொண்டிருப்பார்கள். வெள்ளியிரவு லேட்நைட் பார்டிகளிலிருந்து அதிகாலை வந்து, அசதி நீங்காமல் தூக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும். அங்கு இரு இளம் பெண்கள் தத்தம் காதலருடன் வசிக்கிறார்கள். அங்கு வசிக்கும் ஒரு ஆடவன், ரிவொலியின் மாணவன். வங்கதேசத்தில் உள்ள சிலேட் நகரிலிருந்து முனைவர் பட்டம் பெற டொரொண்டொ வந்தவன். ரிஸ்வான் என்று பெயர். அவனுடைய காதலி – ரிபெக்கா – சட்டம் பயில்கிறாள். கனடாவைச்சேர்ந்தவள். மற்ற ஜோடியைப்பற்றி ரிவோலிக்கு அதிகம் தெரியாது. ரிஸ்வான் ரிவோலியின் வீட்டிற்கு வழக்கமாக வந்து போகிறவன். ஒரிரு முறை அவனது காதலி ரிபெக்காவும் அவனோடு வந்திருக்கிறாள்.

இந்த ரிஸ்வான் ரிபெக்காவுடன் கடைசி வரை இருப்பானா? பால் வடியும் முகம் கமிட்மெண்டுக்கு அடையாளமாகாது. அப்படியிருந்தால், தேவ்-வும் என்னுடன் இருந்திருப்பான். தனியாக இருக்கும் பொழுதுகளில் எல்லாம் தேவ் பற்றிய சிந்தனை திரும்ப திரும்ப வருகிறது.

எங்கு போனார்கள் டேனியலும், சிவப்பெருமாளும்? சனிக்கிழமை மதியம் அவர்கள் செய்யும் ஆய்வு சம்பந்தமான உரையாடலுக்காக வருகிறேன் என்ற மாணவர்கள். டேனியலை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றாள். அவர்களிருவரும் பல்கலைக்கழகத்தில் இருந்தால். அங்கே வந்து கூட உரையாட தயார் என்று சொல்லலாம் என்று நினைத்தாள். டேனியல் போனை எடுக்கவில்லை.

குளியலுக்கு பின்னர், புத்துணர்வு மீண்டது போலிருந்தது. பாஸ்டா செய்து சாப்பிட்டாள். உப்பு குறைவாக போய் விட்டது. பாதி சாப்பிட்டுவிட்டு, மீதியை ஃப்ரிட்ஜ்-ஜில் வைத்தாள். டேனியலிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. சிவ பெருமாள் தன் உறவினர்களின் இல்லத்திற்கு போய் விட்டபடியாலும், டேனியலின் காதலியின் பிறந்த நாள் விழா ஞாயிறன்று வருவதால் அதன் ஆயத்தப்பணிகளில் காதலிக்கு உதவி புரியவேண்டியிருப்பதாலும், சனிக்கிழமை மதியம் வர இயலாது என்று தெரிவித்திருந்தான். முன்னரே தெரிந்திருந்தால், ரிவோலி தன் தோழிகளிருவரை சந்திக்க சென்றிருப்பாள்.

தில்லிக்கு போன் செய்து, தந்தையுடன் பேசினாள். “எப்படியிருக்கிறாய்?” என்ரு வாஞ்சையுடன் கேட்டார் ரிவோலியின் தந்தை – சுரேந்திர மெஹ்ரா. பிசினசிலிருந்து ஒய்வு பெற்று கோயில், ஆன்மீகம், நண்பர்கள் என்று காலத்தை கழித்து கொண்டிருக்கிறார். “நீ சம்பாதிக்க வேண்டுமென்று என்ன இருக்கிறது? அவ்வளவு தூரம் சென்று ஆசிரியையாக பணியாற்றும் உனக்கு நம் ஊரில் எளிதாக அதே வேலை கிடைத்து விடாதா? என் பக்கத்தில் இங்கே, தில்லியில் நீ இருக்கலாகாதா?” என்று பலமுறை மன்றாடிக்கேட்டிருக்கிறார். அப்பொதேல்லாம், ஒரு வறட்டு மௌனத்தை விட வேறு பதில் இருந்ததில்லை ரிவோலியிடம். அண்ணனிடம், அண்ணியிடம் மாதம் ஒருமுறை பேசுவதோடு சரி. அண்ணனின் குழந்தைகளிடம் சிற்ப்பான பரிவோ உறவுமுறையோ ரிவோலிக்கு இதுவரை இருந்ததில்லை. அப்படி வருவதற்கான சந்தர்ப்பமும் நிகழவில்லை, ஏனெனில், ரிவோலி தில்லி சென்று அவர்களையெல்லாம் சந்தித்து ஐந்தாறு ஆண்டுகளாகி விட்டன.

அப்பாவிடம் சில நிமிடங்கள் பேசியபிறகு, சைக்கிளை ஒட்டிக்கொண்டு, பல்கலைகழக கிளப்புக்கு போனாள். கொஞ்ச நேரம் டென்னிஸ் விளையாடினாள். அவளுடன் விளையாட்டில் பங்கு பெற்ற தோழியுடன் உட்கார்ந்து அரட்டை கொஞ்ச நேரம். பின்னர் இருவரும் சேர்ந்து திரைப்படம் காண முடிவு செய்தார்கள். “கறுப்பு அன்னம்” என்ற ஆங்கிலப்படம். ரிவோலி இரண்டு மணி நேரங்களுக்கு திரைப்படத்தில் லயித்திருந்தாள். கூட வந்த தோழி, திரைப்படம் முடிந்தவுடனேயே விடைபெற்றாள். ரிவோலி இரவு உணவை ரெஸ்டாரண்டில் தனியாக உண்ண வேண்டியதாகி விட்டது.

வீட்டுக்கு திரும்பிய அரை மணி நேரத்தில், தொலைக்காட்சி ஒடிக்கொண்டிருந்த சத்தத்தையும் மீறி ஹாலில் இருந்த சோபாவில் கண்ணயர்ந்தாள். ஒரு மணியிருக்கும். சடக்கென்று விழித்து, உதட்டில் வழிந்த எச்சிலை துடைத்துக்கொண்டாள். தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, படுக்கையறையில் சென்று படுத்தாள். தூக்கம் விலகி விட்டது. நெடுநேரம், நிலையில்லாத சிந்தனைகள். புரண்டு, புரண்டு, மெத்தையே உஷ்ணமாகியது போல பட்டது. அறை ஹீட்டர் அனணக்க வேண்டுமோ? படுக்கையிலிருந்து எழுந்து, ஃப்ரிட்ஜிலிருந்து வைன் பாட்டிலை திறந்து இரண்டு மடக்கு விழுங்கினாள். பாதி படித்து, டேபிளில் மேல் மடித்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய எழுத்தாளர் ஒருவர் எழுதி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நாவலை படிக்க ஆரம்பித்தாள்.

ஞாயிறு காலையில், ரிவோலி விழித்தபோது ஒரே தலைவலி. பால் சேர்க்காமல் காபி குடித்தாள். தேவ் சரியான காபி குடியன். நாளைக்கு ஐந்தாறு முறை குடிப்பான். ரிவோலிக்கு தேவ்வுடன் வசிக்க ஆரம்பிக்கும் முன்னதாக காபி குடிக்கும் பழக்கம் இருந்ததில்லை. காபி குடிக்க ஆரம்பித்ததே, படுதலைவலியென்று, தலை துவட்டும் துண்டை தலையில் கட்டிக்கொண்டு ரிவோலி சயனித்திருந்த ஒரு ஞாயிறன்று தான். சுடச்சுட காபி போட்டு எடுத்து வந்தான். “இந்த அமிர்தத்தை பருகிப்பார்…உன் தலைவலி ஓடிப்போய்விடும்” என்றபடி அவள் அருகில் அமர்ந்து காபிக்கோப்பையை தந்தான். அவன் தோள்களில் சாய்ந்து கொண்டே அருந்தினாள். தலைவலி போனது காபியாலா? அல்லது தேவ்வின் அணைப்பினாலா?

ரிவோலியுடன் வாழ்ந்த நாட்களில், அவனிடம் மது அருந்தும் பழக்கமிருந்ததில்லை. இப்போது குடிக்க ஆரம்பித்திருக்கலாம். தெரியாது. ரிவோலிக்கு மதுப்பழக்கம் தொற்றிவிட்டிருந்தது. தேவ் அவள் வாழ்க்கையை விட்டு நீங்கிய கொஞ்ச நாட்களில் குடிக்க ஆரம்பித்தாள். ஒரு வருடம் முன்பு, குடல் வியாதி வந்து, சிகிச்சை பெற்றபோது குடிக்கும் பழக்கத்தை மட்டுப்படுத்திக்கொண்டாள்.

தன் கடந்த வாழ்க்கையின் அங்கம் தேவ். கடந்த காலத்தை முழுதும் மறத்தல் சாத்தியமானதா? தேவ்வின் மேல் நான் கொண்டிருந்த காதல் தர்ககபூர்வமானதல்ல! காதலில் விழுதல் என்ற சொற்றொடர் எத்துனை பொருத்தமானது? குழியை தேர்ந்தெடுத்தா விழுகிறோம்? விபத்தாக, எந்த திட்டமிடலும் இல்லாமல் தானே விழுகிறோம்.

வெதுவெதுப்பான ஷவர்க்குளியல்! வழக்கத்தை விட அதிகமான நேரம் குளித்தாள். ஒற்றை துண்டை அணிந்தவண்ணம், கண்ணாடியை பார்த்தவாறு, கேசத்தை துடைத்தாள். காதுக்கு மேல், ஒரிரு வெள்ளை முடிகள் எட்டிப்பார்த்தன. கத்திரிக்கோலினால் வெட்டினாள். வெட்டப்பட்ட வெள்ளை முடிகளை, சன்னல் வெளிச்சத்தில் பார்த்தபடியே தடவிக்கொடுத்தாள். தேவ்-வையும் இது மாதிரி தன் வாழ்க்கையிலிருந்து வெகு முன்னரே எடுத்தெரிந்திருக்க வேண்டும். ஏன் முடியாமல் போயிற்று? வேண்டாமென்று வெட்டிய வெள்ளை முடியை தூக்கி எறிய மனமில்லாமல் தடவிக்கொடுப்பது மாதிரியான ஒரு தெரிவை நான் செய்தேன்.

ரிவோலியும் தேவ்வும் அமெரிக்கா வந்து டெக்ஸாசில் உள்ள ஹண்ட்ஸ்வில் நகரில் உயர் படிப்பு படிக்க ஆரம்பித்த நாட்களில் நடந்த ஒர் உரையாடல் ரிவோலியின் நினைவுத்திரையில் ஒடிற்று.

“நான் ஒரு ப்ரேக்மடிஸ்ட்…இத்தனை வருடம் காதலித்தது, அமெரிக்கா வரை ஒன்றாக படிக்க வந்து சேர்ந்தது வரை ஓகே. சேர்ந்து ஒரே வீட்டில் இருப்பது கூட சரிதான். ஆனால் ஒன்றை நீ கருத்தில் வைத்து முடிவெடு. என் வீட்டில் என் பெற்றோர் நம் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டார்கள். ட்ரெடிஷனல் மார்வாரி பிசினஸ் குடும்பத்தில் பிறந்தவன் நான். எங்கள் கம்யூனிடியை விட்டு வேறு யாரையும் திருமணம் செய்தல் முடியவே முடியாத ஒன்று.”

தேவ் மேற்கண்டவற்றை ஒரு சலனமுமில்லாமல் சொன்னான். ரிவோலி ஒரு வெறுமையான முகபாவத்துடன் கேட்டுக்கொண்டாள். குழப்பமா? அல்லது கோபமா? கடுமையாக ஏமாற்றப்படும் உணர்வா? எதை அவள் முகம் பிரதிபலித்தது? இரண்டு தினங்கள் இருவருக்குமிடையில் ஒரு சம்பாஷணையும் நடக்கவில்லை. தேவ் ஹாலில் படுத்துக்கொண்டான். படுக்கையறை கதவை சார்த்திக்கொண்டு, வெகுநேரம் சிந்தித்தாள். மூன்றாவது நாளிரவு, படுக்கையறைக்குள் தேவ் அனுமதிக்கப்பட்டான்.

“உன்னைக்கண்டு பித்தேறி, நீ படித்த கல்லூரியின் ஹாஸ்டல் சுவரை தாண்டிக்குதித்து, நள்ளிரவில் உன் அறை புகுந்து என் காதலை நானேதான் சொன்னேன். அமேரிக்காவில் படிக்கவேண்டும் என்ற உன்னுடைய இலட்சியத்துக்கு குறுக்கே நிற்காமல், அதே சமயம் உன்னை விட்டு பிரியக்கூடாது என்ற எண்ணத்தால், என் குடும்பத்தினரிடம் பிடிவாதம் பிடித்து, நீ சேர்ந்த அதே பல்கலைக்கழகத்தில் சேர்ந்து…..இதெல்லாம் எதற்காக? உன் மேல் கொண்ட கட்டுப்பாடில்லா நிபந்தனையற்ற காதலால்….இனிமேலும் நிபந்தனை விதிக்க மாட்டேன்…உன் படிப்பு முடியும் வரை சேர்ந்தே இருப்போம்…” – என்றாள் ரிவோலி. சொற்கள் தெளிவாக வெளிப்பட்டன.

“படிப்பிற்கு பிறகு நான் உன்னை திருமணம் செய்யாமல் போனால்..?” – வினவினான் தேவ். புன்னகைத்த மாதிரி இருந்தது.

“உன் மனம் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உன் பெற்றோர்களிடம் நீ எனக்காக பேசுவாய்”

“அப்படி பேசாமல் போய், வீட்டில் பார்த்து வைக்கும் பெண்ணை நான் கல்யாணம் செய்து கொண்டால்…?” – புன்னகையுடன் கேட்டான் தேவ். அவன் கைகள் ரிவோலியின் இடைப்பகுதியை லேசாக துழாவிக்கொண்டிருந்தன.. அவள் பதில் கூறுமுன் அவள் இதழ்களை அழுத்தி முத்தமிட்டான்.

வெள்ளை முடிகளை குப்பையில் எறிந்தாள்.

அவள் பேராசிரியராக இருக்கும் பல்கலைக்கழகத்தில் கணக்கராக இருக்கும் ஆஃப்ரோ-கரிபியப்பெண் – க்ரிஸ்டினா என்பவள் ரிவோலியின் நண்பி. ட்ரினிடாடில் பிறந்து வளர்ந்தவள். புசுபுசுவென்று சுருண்ட முடியும், உச்ச சாரிரமும் கொண்டவள். ரிவோலி தங்கியிருக்கும் ஊரிலிருந்து பத்து மைல் தள்ளியிருந்த ஒரு கிராமத்தில், டையமண்ட்ஸ் இன் என்ற பெயர் கொண்ட ஒர் அழகான பப் (pub) இருந்தது. எல்லா ஞாயிறு மாலைகளும் ரிவோலியும் க்ரிஸ்டினாவும் அங்கு போவது வழக்கம். அன்று வழக்கத்திற்கு மாறாக ரிவோலி கோனியாக் அருந்தினாள். பபில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ரிஸ்வானும் ரிபெக்காவும் அன்று அந்த பபில் இருந்தார்கள். ரிஸ்வான் ரிவோலியைப்பார்த்து கையாட்டினான்.

க்ரிஸ்டினாவின் நகைச்சுவையுடன் கூடிய பேச்சை கேட்டு சிரித்துக்கொண்டிருந்தாள். வார்த்தைக்கு வார்த்தை புணர்ச்சியின் ஆங்கிலச்சொல்லை சேர்த்து சேர்த்து க்ரிஸ்டினா பேசிக்கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது.

ரிவோலியின் கைத்தொலைபேசி கூவியது. பபில் நிலவிய சத்ததில் கைத்தொலைபேசியின் அலறல் காதில் விழவில்லை. க்ரிஸ்டினா தான் சொன்னாள். கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு பபின் வாசலுக்கு வந்தாள். ரிவோலியின் அண்ணியுடைய அக்கா டொரொன்டொவில் வசிக்கிறாள். அவளுடைய அழைப்புதான் அது.

“ஓ! பபில் இருக்கிறாயா?” – அண்ணியின் அக்காவின் குரலில் ஏளனம் தொனித்தது.

“இல்லை…இன்று திருமணப்பெண்கள் கொண்டாடும் கர்வாசௌத்…நீ தனியே இருப்பாயே….இன்று இரவு எங்கள் வீட்டில் சாப்பிட அழைக்கலாமென்று பார்த்தேன்….என் கணவரும் காரில் உன்னை அழைத்து வருகிறேன் என்றார்…நீ பிஸி போலிருக்கிறது”

கைத்தொலைபேசி வைக்கப்பட்டதும் ரிவோலி கசப்பாக உணர்ந்தாள். கண்மண் தெரியா கோபவுணர்வு நெஞ்சில் பெருக்கெடுத்தது. இரண்டு மூன்று பெக் மதுவை வேகமாக குடித்தாள்.

“எனி திங் ராங்?” என்று க்ரிஸ்டினா கேட்டாள்.

ஒன்றுமில்லை என்று பொருள் படும்படியாக புணர்ச்சியின் ஆங்கிலச்சொல்லை ரிவோலியும் பயன்படுத்தியதும் இருவரும் குபீரென சிரித்தனர்.

திடீரென்று, க்றிஸ்டினாவிடம் சொல்லிக்கொண்டு ரிவோலி வீட்டுக்கு கிளம்பினாள். பபின் வாசலை அடைந்ததும் வாந்தியெடுத்தாள். அவள் வாந்தியெடுப்பதை பார்த்த ரிஸ்வானும் ரிபெக்காவும் அவளை காரில் உட்காரவைத்தனர். ரிஸ்வான் காரை செலுத்திச்சென்று, ரிவோலியை வீட்டில் விட்டான்.

திங்கள் கிழமை ரிவோலி விழிக்கும் போது எட்டரை மணியாகிவிட்டது. அன்று அவளுடைய முதல் லெக்சர் ஒன்பது மணிக்கு இருந்தது. உடல் நிலை சரியில்லையென்று விடுப்பெடுத்துக்கொண்டாள். இது மாதிரி திட்டமிடப்படாத, கடைசி நேர விடுமுறை எடுப்பது அவ்வளவாக நிகழுந்ததில்லை.

காபி போட்டுக்குடித்து தலைவலியை விரட்ட சோம்பலாக இருந்தது. சோஃபாவில் அமர்ந்து, கண்ணை மூடி உட்கார்ந்திருந்தாள். முந்தைய நாள் மாலை நடந்ததை எண்ணி, ரிவோலிக்கு தன் மீதே வெறுப்பு வந்தது. தன்னைப்பற்றி நெருங்கிய உறவினர்களே வம்பு பேசியும் அவளை கொஞ்சம் கூட பாதிக்காது இருந்திருக்கிறது. எவளோ ஒரு தூரத்து உறவுக்காரி நக்கல் பண்ணியதால் இத்தனை சலனம் ஏன் ஏற்பட்டது?

தில்லியிலிருந்து அண்ணனின் போன் செய்தான். சேம விசாரிப்புக்கு பிறகு அவன் சொன்ன செய்தி ரிவோலியினுள்ளில் அதிசயமாக எந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கவில்லை.

“கேள்விப்பட்டாயா? ஒரு துயரகரமான சம்பவம். உன் பழைய நண்பன் – தேவ் – தன் மனைவி, தன் மூன்று வயது மகன் – இவர்களை தன் கைத்துப்பாக்கியால் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டான்….கலிபோர்னியவில் உள்ள சான்ஹொசேயில் வசித்து வந்திருக்கிறான். ஒரு வருடம் முன்னர் பங்குசந்தையில் எல்லா முதலீடுகளையும் இழந்ததால், மனனிலை சரியில்லாமல் அலைந்திருக்கிறான்… சி என் என்னில் காட்டுகிறார்கள் பார்…”

சி என் என்னில் தேவ்வின் பழைய புகைப்படமொன்றை ஸ்டில்லாக காட்டிக்கொண்டிருந்தார்கள். ரிவோலி எடுத்த புகைப்படம். எட்டு வருடங்களுக்கு முன்னர் நயாகராவில் எடுத்தது.

பின் குறிப்பு : ரிவோலி கனடாவிலிருந்து தாயகம் திரும்பிவந்துவிட்டாள். சண்டிகர் நகரில் வாழ்கிறாள். வழக்கறிஞர் ஒருவரை மணந்து கொண்டாள். அவளுக்கு ஆறு மாதம் முன்பு ஒர் அழகான பெண் குழந்தை பிறந்தது.

(நன்றி : திண்ணை) – http://puthu.thinnai.com/?p=8895

சந்தை

வீட்டில் செய்த
பண்டங்களை
விற்க
கடைகடையாய் ஏறி இறங்கினேன்.
ஒரு கடைகாரனும்
என் பண்டத்தை கடையில் வைத்து விற்க
சம்மதிக்கவில்லை…
பண்டங்களை
நானே தின்று தீர்க்கவேண்டியதாகிவிட்டது.
அடுத்த நாளும்
பண்டங்களை செய்தேன்..
விற்பனை செய்ய
தெருவெங்கும்
கூவிச்சென்றேன்.
யார் வீட்டு
கதவுகளும் திறக்கவில்லை
காசு கொடுத்து
வானொலியில் என் பண்டத்தின் பெயரை
ஒலிக்கச்செய்தேன்.
ஒன்று கூட விற்கவில்லை.
சுவரொட்டிகளும்
விளம்பரங்களும்
பத்திரிக்கைகளும்
எதனாலும்
கைகூடவில்லை விற்பனை.
நடுத்தெருவில்
வீசியெறிந்தேன்
என் பண்டத்தை.
வீதியெங்கும் சிதறிக்கிடந்தவற்றை
என்னவென்று பார்த்து
பின்னர் சுவைத்தனர்.
அடுத்த நாள்
பண்டத்தை
சமைக்கத்துவங்கிய போது
வாசலெங்கும்
நுகர்வோர்களின் வரிசை.