நிழலொன்று விடாமல் துரத்திக்கொண்டு வந்தது.
எங்கு போனாலும்
என்னை விடவில்லை.
நடைபாதையோரமாக
ஒதுங்கிநிற்கையில்
மறைந்துபோகிறது;
பின்னர்
நடையைத்தொடரும்போதோ
திரம்பவும் துரத்துகிறது.
இனியும்
பணிந்துபோனால்
இழுக்கு!
ஒரு கை பார்த்துவிடவேண்டும்
சடக்கென திரும்பி
நிழலை துரத்தத்துவங்கினேன்.
அதுவரை பின் தொடர்ந்து வந்து
என்னைச்சீண்டிய நிழல்
இப்போது என் வேகத்திற்கு
ஈடு கொடுத்து
என் முன்னால் ஓடுகிறது.
அந்திப்பொழுது வரை
அதனை பிடிக்கமுடியவில்லை.
ஏதொவொரு புள்ளியில்
என் பார்வையிலிருந்து
நிழல் மறைந்துபோக,
வீடு திரும்பினேன்
Monthly Archives: December 2011
சமரசம்
தனியார் நிலமொன்றில்
தெருவோரக்கிரிக்கெட்
விளையாடினார்கள் சிறுவர்கள்.
மட்டைக்குரிமையாளனே
முதலில் மட்டை பிடிப்பான்.
அவ்வளவு எளிதில்
ஆட்டமிழப்பதுமில்லை.
ஒங்கி அடித்தான் பந்தை.
சுவரைத்தாண்டி
ரோட்டில் விழுந்தது.
பந்து சுவரைத்தாண்டிப்போய் விழுந்தால் அவுட்.
ஆட்டமிழக்கவிருப்பமில்லை மட்டையாளனுக்கு.
தானே அம்பயராக வேண்டுமென்று
அடம் பிடிக்க ஆரம்பித்தான்.
அவன் கருத்துப்படி
அவன் “நாட் அவுட்”
அவனைப்பெவிலியனுக்கு
அனுப்ப பேச்சு வார்த்தை துவங்கியது.
ரோட்டில் விழுந்து
லாரியொன்றின்
டயரில் சிக்கி நசுங்கிப்பொயிருந்த பந்தை
எடுத்துவந்தான் ஒரு பீல்டர்.
ஆட்டம் தொடர வேறொரு பந்து வேண்டும்.
வேறொரு பந்து வாங்கிவர
மட்டைக்குரிமையாளனை
வேண்டிக்கோண்டார்கள்.
அவன் இன்னொரு பந்து கொண்டுவந்தால் போதும்.
மூன்று முறை அவுட் ஆவதுவரை
மட்டை பிடிக்கலாம்.
அவன் அவுட் ஆனானாவென்று
அவன் தான் அம்பயராக இருந்து முடிவெடுப்பான்.
கொடுக்கப்பட்ட சலுகைகளை
பெரியமனது பண்ணி ஏற்றுக்கொண்டு
கடைவீதி வரை சென்றான் மட்டையின் உரிமையாளன்.
அவன் திரும்பிவரும்வரை
அவன் விட்டுப்போயிருந்த
மட்டையில்
சிறுகற்களை அடித்து பயிற்சி செய்தார்கள் மற்ற சிறுவர்கள்.
குன்றின் உச்சியில்…
முழுதும் மொட்டையடிக்கப்பட்ட
ஒற்றைக்குன்று
அதன் உச்சியில்
ஒரே ஒரு மரம்.
குன்றின் பின்னிலிருந்து
உதித்துக்கொண்டிருந்த
சூரியனின் கதிர்களை
மறைத்தது
உச்சியில் இருந்த ஒற்றை மரம்.
+++++
மருந்துக்கு
ஒரு புல் கூடமுளைத்திருக்கவில்லை.
குன்றின் சொறசொறப்பான உடம்பை
இறுக்கப்பற்றி ஏறிக்கொண்டிருக்கையில்
கைகள் சிவந்துபோயின.
சில இடங்களில்
கல்குவாரிக்காரர்கள் ஏற்படுத்திய
வழுவழுப்பில்
கால்கள் வழுக்கினாலும்
கரங்கள் சுகம் பெற்றன.
சற்றுநேரத்தில்
சூரியன் மரத்திற்கு பின்னிலிருந்து
உயர எழுந்து
கண்ணைக்கூசவைத்தது.
கூசிய கண்களை
சுருக்கியபடி
ஏறி உச்சியை அடைந்தேன்.
+++++
சூரியனை
புறக்கணித்தவாறு
முதுகைக்காட்டி
நின்றிருந்தேன்.
எதிரே விரிந்திருந்த
சமவெளியின் காட்சி
கண்ணை நிறைத்தது.
பல மைல்களுக்கு
நீண்டு,
வெயில் காயும்
கரும்பாம்பு போன்றதொரு
பிரமிப்பை தந்த
நெடுஞ்சாலை.
அதன்மேல்
எறும்புகள் போல்
ஊறிக்கொண்டிருந்தன
சின்னதும் பெரியதுமான
ஆட்டோமொபைல் வாகனங்கள்.
கொஞ்சம் தள்ளி
பெரும் ஆற்றின் திசையை
மாற்றிய பெருமிதத்தோடு
மல்யுத்தவீரன் மாதிரியான தோற்றத்தில்
பிரம்மாண்டமானதொரு அணைக்கட்டு.
இன்னொரு புறத்தில்
ராட்சத குழாய்கள் வழியே
புகை கக்கிக்கோண்டிருந்த
இரண்டு தொழிற்சாலைகள்.
+++++
அடிவாரத்தில்
சாலையோரக்கடையொன்றில்
அமர்ந்தபடி
குன்றின் உச்சியை அண்ணாந்து மீண்டும் பார்த்தேன்.
குன்றின் பரப்பை
மதிய சூரியன்
சுட்டெரித்துக்கொண்டிருந்தது.
காட்சி –> சிந்தனை –> கருத்து?
வெண்மணல்.
உடைந்த சிறுசிறு கண்ணாடித்துண்டுகள்.
காயாத செந்நிற திரவம்.
ஒர் இறுக்கமான ஒவியத்தின்
சாத்தியக்கூறுகள்.
திருட்டுத்தனமாக
புகைக்க வந்த சிறுவன்
மணல்மேட்டில்
சிதறிக்கிடந்த
கூறான கண்ணாடித்துண்டுகளை
கவனிக்காமல்
தடுக்கிவிழுந்திருக்கலாமோ?
ஆற்றோரமாயொரு சமயவிழாவில்
நடந்த குரூரமான
வன்முறையின்
குறியீடோ?
காதலனொருவன்
காதலியின் மேல்
சிவப்புநீரடித்து
ரகசியமாக
“ஹோலி” கொண்டாடுகையில்
உடைந்துபோன
வெண்ணிற வளையல்துண்டுகளோ?
உரிமம் பெறாத
மருத்துவர் செய்த
கருக்கலைப்புக்கான
ஆதாரங்களின்
குவியலோ?
+++++
மணற்புயலுருவாகி
மணல் மூடி
கண்ணாடித்துண்டுகள் மற்றும்
செந்நிற திரவம்
மறைந்து போயின.
+++++
விழியிலிருந்த காட்சி
சிந்தனைகளாக உருமாறின.
சிறுவனின் கள்ளம்,
வன்முறை தூண்டும் மதங்கள்,
ரகசியக்காதல்கள்,
நெறிமுறையற்ற உத்தியோகங்கள்
எனப்பல சிந்தனைகள்.
சிந்தனைகளும் விரைவில்
உருமாறக்கூடும்….
கருத்துகளாக!
காற்று
அறையில் நுழைந்ததும்
வெளிச்சம் உள்நுழைய
சன்னல்கள் திறக்கப்பட்டன.
அனுமதியின்றி
காற்றும் நுழைந்தது.
சரியாக சதுரவடிவில்
கிழித்து போடப்பட்டு
தரையில் சிதறிக்கிடந்த
துண்டு காகிதங்கள்
ஒன்றிணைந்து
மீண்டும் வெற்றுத்தாளானது.
வெண்தாளுக்கு
மஞ்சள் நிறம் பூசியது
மாலை நேர பொன்வெயில்.
யாரும் வரையாமல்
ஒரு பறவையின்
ஒவியமொன்று
மஞ்சள் தாளில் தோன்றியது.
மின்விசிறி
சுழல ஆரம்பித்தது.
சன்னல் திட்டில்
வீற்றிருந்த
பறவையோடு
மஞ்சள்நிற பின்புறத்தில்
பூத்திருந்த
கரும்பறவை ஓவியமும் பறந்துபோனது.
தாள் காகிதத்துண்டுகளாகி, பிரிந்து
முன்னர்போல மூலைக்கொன்றாய்
அலைந்து திரிந்தன.
ஒர் ஆப்பிளும் ஆறு விதைகளும்
எண்ணுதல் எளிது.
விதைக்குள் இருக்கும் பழங்களை
எண்ணுவது எப்படி?
+++++
அறுத்துவைத்த ஆப்பிளுக்குள்
இருந்த விதை ஆறு !
பத்திரப்படுத்தி வைத்திருந்த
விதைகளைக் கவர்ந்ததாரு?
என்னிடமிருப்பது ஒரே ஒர் ஆப்பிள்.
விதைகளை கொண்டு தாரும் !
கடைசி ஆப்பிளை தரவும் சம்மதம்.
விதையிருந்தால் போதும்.
+++++
காணாமல்போன விதைகளைத்தேடி
கானகம் வரை வந்துவிட்டேன்.
நிறைய மரங்கள் !
என் வீட்டிலிருந்து
களவு போன விதையிலிருந்து
எந்த மரம்
முளைத்தது?
யாராவது சொல்லுங்கள் !
+++++
அழிவும் உருவாக்கமும்
நானூறு மெல்லிய கதிர்கள்
ஒருங்கிணைந்து
ஒற்றைக்கதிரானது.
திண்மை பெருகி
ஒளியின் உக்கிரம்
ஆயிரம் மடங்கானது.
நேர்க்கோட்டில் பயணித்தது கதிர்.
எதிர்வந்த திடப் பொருள்கள்
கிழிந்தன.
திரவப்பொருள்கள்
கொதித்தன.
ஏழைச்சுவர் ஒன்று
அதன் பாதையில் வந்தது.
சுவர் செங்குத்தாக
இரண்டு பட்டது.
சுவர் உடைந்ததில்
செங்கல் துகளோன்று
மண்ணில் வீழ்ந்தது.
சில நூறு வருடங்களில்
சுவரிருந்த இடத்தில்
ஆறொன்று ஓடத்துவங்கியது.
ஆற்று நீரின் அரிப்பில்
இரண்டாக உடைந்திருந்த சுவர்
முழுதும் அரிக்கப்பட்டு
அடித்துச்செல்லப்பட்டது.
செங்கல் துகள் மட்டும்
அரிப்புக்குள்ளாகாமல்
நீரால்
தள்ளிக்கொண்டு போகாமல்
தரையை இறுக்க பற்றிக்கொண்டு ஜீவித்திருந்தது.
தனிமைப்பட்டுப்போன துகளின்
வாழ்க்கை போல
ஆறும் ஒருநாள் வறண்டு போனது.
ஆறோடிய படுகை
பாலை போலானது.
நீர்த்தாவரங்களெல்லாம்
வாடி கருகின.
காட்டுப்பகுதியில்
எழுந்த தீயில்
வாடிய நீர்த்தாவரங்களும்
எரிந்து
ஒற்றை செங்கல்துகள்
நீறு பூத்தது.
அண்டவெளியிலிருந்து
இறங்கிய கதிர்க்கோடொன்று
சுவரிருந்த ஆற்றுபகுதியை
தாக்கியபோது
நீறு பூத்த துகள்
தீயாகி
பின்னர் துணை அணு
ரூபங்கொண்டு
கதிர்க்கோட்டின்
அங்கமானது.
ஒளி வடிவில்
புனர்ஜென்மம் பெற்ற
முன்னாள் செங்கல் துகள்
சென்றபாதையில்
தென்பட்டவற்றையெல்லாம் –
சில ஏழைச்சுவர்களையும் சேர்த்து –
கருக்கி, பஸ்மமாக்கி
காற்றின் வேகத்தில்
விரைந்தது.
நிழல் விமானம்
வெண் திரைத்துணியில்
கருஞ்சித்திரமாய்
நகர்ந்து கொண்டிருந்தது
நிழல் விமானம்
பச்சை வயல்கள்,
மணற்பரப்புகள்,
தொழிற்சாலை கூரைகள்..
எல்லாவற்றின் மீதும்
கருநாகம் போல ஊர்ந்து சென்றது.
தந்தை கைப்பிடித்து
குதித்து குதித்து நடக்கும்
சிறுவனின் உற்சாகம்.
பிரம்மாண்டமானதொரு
நீர்ப்பாசன கிணறொன்றில்
பாய்ந்தபோது
நிழல் விமானம்
மறைந்துபோனது.
சகபயணியொருவர்
பயணத்தில் காணாமல்போனால்
உண்டாகும் பதைப்புடன்
பார்வையை
சுழலவிட்டேன்.
கருமேகங்கள் சூழ்ந்திருந்தன.
கதிரவன் ஒளிந்திருந்தான்.
போதுமான ஒளியின்மையால்
நிழல் விமானத்தை தேட முடியவில்லை.
மேகங்கள் விலகி
சூரியன் மீண்டும் வெளிவந்த
சில நொடிகளில்
அதிர்வின்றி
தரையை தொட்டது விமானம்.
முட்டிமோதி
படியில் இறங்கி
பேருந்தில் அமருமுன்
நிழல் விமானத்தை மீண்டும் பார்த்தேன்.
எவ்வித அசைவுமின்றி
ராட்சத அளவில்
அமைதியுற்று நிற்கும்
விமானத்தின் அடியில்
நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தது
நிழல் விமானம்.
நண்பனின் மரணம்
மும்பையில் என் நண்பன் – நினாத் – உயிரிழந்துவிட்டான். பூனாவிலிருந்து இன்னொரு நண்பன் போன் செய்துசொன்னான். எதாவது வம்புக்காக மட்டும் போன் செய்து கொஞ்சம் "போர்"அடிக்கும் பூனா நண்பனின் தொலைபேசி அழைப்பை நிறைய நேரம் எடுக்காமல் இருந்திருக்கிறேன். இன்று நான் அப்படி செய்யவில்லை. எடுக்காமல் விட்டிருக்கலாமோ? இல்லை இன்று என்றில்லை, நினாத் (Ninad) தின் மரணச்செய்தி எப்போது எட்டியிருந்தாலும், இன்றைய மாலையில் எனக்குள் ஏற்படுத்திய அதே அதிர்ச்சியை மாறாமல் தந்திருக்கும்.
இறக்கும் வயதல்ல நினாத்துக்கு. 35 வயதுதான் ஆகியிருக்கும். அவனின் அழகான சிரிப்பு அவனது இம்மியளவு கூட தீங்கற்ற மனப்பாங்கை பிரதிபலிக்கும். களங்கமற்ற குழந்தை மனதுதான் அவனுக்கு என்பது மிகையில்லாத வருணனை. அவனை தெரிந்தவர்கள் எல்லாரும் இதை ஒப்புக்கொள்வார்கள்.
ஐந்து வருடங்கள் நானும் நினாதும் சேர்ந்து ஒரே நிறுவனத்தில் பணி புரிந்தோம். கல்லூரியிலிருந்து வெளிவந்து வேலையில் சேர்ந்த வாலிபனாக அவனை நான் அறிவேன். நிறுவனத்தில் திடீரென்று பெருந்தலைகள் வேலையை விட்டபோது, நாங்கள் இருவரும் ஒரே அணியில் இணைந்து இரவு பகல் என பேரார்வத்துடன் பொறுப்புடன் பணிபுரிந்த தினங்கள் எனக்கு ஞாபகமிருக்கிறது.
நிறுவனத்தலைவர் மேல் அவ்வப்பொழுது எழும் வெறுப்பை இருவரும் மதியவுணவு சேர்ந்து உட்கொள்ளும்போது பகிர்ந்துகொள்வது வழக்கம். அப்போதெல்லாம், நினாத் புன்னகை வழிய "நீ சொல்லு…நாளைக்கே இருவரும் சேர்ந்தே வேலையை ரிசைன் பண்ணிவிடுவோம்" என்று சொல்வான். அப்போது அவன் திருமணமாகாத பிரம்மச்சாரி. எனக்கோ இருகுழந்தைகள் பிறந்திருந்தன. எனவே இந்த சம்பாஷணை ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே என்று இருவருமே அறிந்திருந்தோம். வேடிக்கை என்னவென்றால், அவன் நகைச்சுவைக்காக சொன்னது உண்மையாகவே நடந்தது. ஜூலை 2008 இல் எங்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் வேறு நல்ல வேலை கிடைத்தது. எனக்கு தில்லியில். அவனுக்கு பெங்களூரில். ஒரேசமயத்தில் ராஜினாமா கடிதத்தை தந்தபோது, "என்ன பேசிவைத்துக்கொண்டு ராஜினாமா செய்கிறீர்களா?" என்று நிறுவனத்தலைவர் கேட்டார். அறையிலிருந்து வெளிவந்ததும், நானும் அவனும் சேர்ந்து பலநிமிடங்கள் சிரித்தோம்.
நாங்கள் வேலை மாறிய பிறகு எங்கள் தொடர்பு இன்னும் வலுப்பட்டது. எங்கள் புதுவேலைகளின் அவஸ்தைகள், போராட்டங்கள் எல்லாம் நீண்ட தொலபேசியுரையாடல்களில் பரிமாறிக்கொண்டிருப்போம். முன்று வருடங்கள் முன்னர் அவனின் திருமணம் நடந்தது. அலுவலகப்பணி தொடர்பாக ஓர் அயல்நாட்டு விஜயம் மேற்கொண்டதால், அவனுடைய திருமணத்துக்கு போகமுடியவில்லை. பின்னர் அவனுடைய நிறுவனம் அவனை மும்பைக்கு இடமாற்றம் செய்யச்சொன்னது. அலுவலகப்பணிக்காக எப்போது மும்பை சென்றாலும், நினாதும் நானும் எங்களுடைய வாடிக்கையான காபி ஷாப்பில் மணி நேரங்கள் உட்கார்ந்து அரட்டை அடிப்பது வழக்கம். கடைசியாக அவனை சந்தித்தது அக்டோபர் 2010 இல். அவனுடைய இரண்டு மாதக்குழந்தை -ஆரவ்-வை தூக்கிக் கொஞ்சியதை இப்போது நினைக்கும்போது நெஞ்சுக்குழியில் இனம்புரியா சங்கடம்.
நண்பா, உனக்கேன் அவசரம் ! வாழ்வை நகைச்சுவை, ரசனை, கும்மாளம் என்று வாழத்தெரிந்த உனக்கு, இவ்வளவு சீக்கிரமாக உலக வாழ்வை நீங்கும் அவசரம் ஏன்? பக்தி (நினாத்தின் இளம் மனைவி) யையும் ஆரவ்-வை யும் நினைத்தால், உன் மரணத்தின் மேல் கண்ணீரோடு, கோபமும் சேர்ந்து வருகிறது. கொடூரமான மரணத்தின் செயல் முறைகளை புரிந்துகொள்ளமுடியவில்லை.