முடிதிருத்தும் நிலையத்தில்
நன்கு தூக்கம் வருகிறது.
திரையரங்குகளிலும்.
தேர்வு எழுதும் அறைகளில்
திறம்பட.
கோவில்களில் மணியோசை
தாயின் தாலாட்டு போலவே ஒலிக்கிறது.
ரயிலின் புறப்பாட்டுக்கு காத்திருக்கும்போது துடங்கி
சேருமிடம் வரும்வரை
சயனம்தான்.
வேலை செய்யுமிடத்தில்
மதியவுணவுக்குப்பின் வரும் கொட்டாவி
பிறருக்கு தெரியாமலிருத்தல்
பிரம்மப்ரயத்தனந்தான்.
மகளின் பள்ளியில்
ஆசிரியர்களை சந்திக்க
காத்திருக்கும் பொழுதுகளில்
குழந்தைகள் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்து
திருப்பள்ளிஎழுச்சியாகும்.
இரவு எத்தனிக்கும்போது மட்டும்
தூக்கம் காணாமல் போய்விடுகிறது.
புத்தகம் படித்தாலும்
காதுக்குள் வைத்து
கைத்தொலைபேசியில் வானொலி கேட்டாலும்
போர்வையால் கால் முதல் தலைவரை போர்த்தி
இருட்டில் கண்ணை அகல விரித்து
தூக்கத்திற்காக காத்திருந்தாலும்.
வருவதில்லை…!
தூக்கம் வர ஏதாவது மந்திரம் இருக்கிறதா?
மனைவியின் காற்றுநிறை குறட்டை சத்தத்தை
கவனமுடன் கேட்கிறேன்.
த்யானம் செய்வது போல.
தேவியருள் புரிந்தாள்.