நிலம்

நிலம் என்ற ஒன்று படைக்கப்பட்டிராவிடில், சிருஷ்டி செய்யப்பட்ட உயிரினங்கள் எங்கு வாழ்ந்திருக்கக்கூடும்? எல்லாமே நீர் வாழ் உயிரினமாகவே இருந்திருக்குமா?. நிலமும் நீரும் உயிரினங்கள் வருவதற்கு முன்னரேயே உருவாகிவிட்டனவே!

நிலத்துக்கேன்றும், நீருக்கேன்றும் தனித்தனி உயிரினங்கள் தோன்றின. பரந்து, விரிந்திருக்கும் நிலத்தின் ஒவ்வொரு பரப்பிலும், அப்பரப்பின் இயற்கையின் தனித்தனி உருவைப்போல விதம் விதமான உயிரினங்கள் ஜீவித்து வருகின்றன. புரியாத ஏதோ ஒரு கடமையை இவ்வுயிரினங்களுக்கு இயற்கை அளித்திருக்கிறது.

ஒவ்வொரு புவியியல் பகுதிகளிலும், நிலத்தின் உரு மாறுகிறது. பள்ளத்தாக்கு, மலை நிலம், வயற்காடு, வெப்பமண்டல காடு, எவ்வளவோ உரு? அங்கங்கு வாழும் உயிரினங்களும், அந்தந்த நிலத்துக்கேற்றவாறு உள்ளன. சில மிருகங்கங்கள், சில பிரதேசங்களில் மட்டுமே வாழ்கின்றன. ஒட்டகத்தைக்காண பாலைவனமும், கரடிகளைக்காண குளிர் பிரதேசமும் போகவேண்டியிருக்கிறது.

+++++

உலகத்திலே நுகர்ந்து அனுபவிக்க பல பொருள்களும், விஷயங்களும் இருக்கின்றன. வெறும் பொருட்கள் மட்டும் இருந்திருந்தால், அனுபவம் முழுமை பெற்றிருக்காது. பொருட்களின் அழகையும் நுண்மையையும் ரசிக்க, உணர்ச்சி என்ற ஒன்றும் தேவையாயிருக்கிறது. கண்ணுக்குத் தெரியும் பொருளோடு, உணர்ச்சி என்ற கண்ணுக்கு தெரியாத கருவியும் இணைந்து அப்பொருளுக்கும் அப்பொருளை நுகர்பவருக்கும் ஓர் அர்த்தத்தை அளிக்கின்றன.

உணர்சசிக்கருவிகள் பல்வேறு வகைப்பட்டன – பயபக்தி, உறுதி, தன்னம்பிக்கை, திறன், நிச்சயம், சந்தோஷம், சுகம், தயை, தைரியம், தீர்மானம், உற்சாகம், ஆவல், ஆற்றல், கிளர்ச்சி, எதிர்பார்ப்பு, எழுச்சி, சிறப்புத்தன்மை, ஆச்சர்யம், உவகை, நன்றி, போற்றும்தன்மை, கவர்ச்சி, வசீகரம், நம்பிக்கை, நகைச்சுவை, ஊக்கம், அக்கறை, சுறுசுறுப்பு, அன்பு, விளையாட்டுத்தன்மை, அமைதி, இன்பம், பலம், பெருமை, நேர்மறை, ஸ்திரம், கம்பீரம், மேன்மை, சிலிர்ப்பு – வரிசை அனகோண்டா பாம்பு மாதிரி மிக நீளமானது.

பயம் மற்றும் வன்முறை சார்ந்த உணர்ச்சிகள், நேர்மறைக்கு மாறான உணர்ச்சிகள். எதிர்மறை உணர்ச்சிகள். தன்னைக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற தற்காப்பு உணர்வின் மறுவடிவமாக அவைகள் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

எல்லா உணர்ச்சிகளும் எல்லாருக்கும் ஒரே அளவினதாய் கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சாதாரண ஒரு செல் உயிரினத்திலிருந்து, சிக்கலான படைப்புகள் வரை பல படைக்கப்பட்டிருக்கின்றன. சிக்கலான உயிரினங்களுக்கு சிக்கலான, மேலே குறிப்பிட்ட குறிப்பிடப்படாத பல உணர்ச்சிக்கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. எந்த உணர்ச்சி எப்போது உபயோகிக்கப்படும் என்று சொல்வது மிகக்கடினம். அந்த உயிரினத்தின் ஆளுமையையும், சமூக பழக்கங்களையும், அப்போதைய மனநிலையையும் பொறுத்தது. இதற்கும் மேலாக அந்த உயிரினத்தின் தன்னினைவுடன் இயங்கும் அறிவை பொறுத்தது.

+++++

பொருள் ஒன்று. ஆனால் அதைக்காணும்போது ஏற்படும் உணர்ச்சிகள் வெவ்வேறு. கருநிறமான, நீளமான பாம்பு. பயவுணர்ச்சியை ஏற்படுத்தலாம். அல்லது அறியும் ஆவலை ஏற்படுத்தலாம். கொன்றுபோடும் வன்முறையை எண்ணத்தை உண்டாக்கலாம். அதே இன பெண் பாம்புக்கு காதல் உணர்ச்சியை தரலாம்.

+++++

கரும்பாம்பு கரும்பு விளை வயலின்னடுவே நகர்ந்து கொண்டிருந்தது. விவசாயி புற்களை வெட்டிக்கொண்டிருந்தான். புதர்போன்று பருமனான வளர்ந்திருந்த புற்களுக்கு நடுவே சுருண்டுபடுத்தது. அதே இடத்தில் சருகு, வாடிய தழைகள் என்று குப்பைகூடமாக இருந்ததால், ஒரு பாதுகாப்பான உணர்வுடன் பாம்பு இளைப்பாரிக்கொண்டிருந்தது. விவசாயியின் மண்வெட்டி புதரை நெருங்கியதும், தனது வேகத்தைக்கூட்ட, பாவம் ஒரு நொடியில், பாம்பு இரு துண்டுகளாக ஆனது. தலைப்பாகம் கொஞ்சம் அசைவதைப் பார்த்த விவசாயி, அதனை இன்னொரு வெட்டு வெட்டினான்.

என்னென்ன உணர்ச்சிகள் இந்த காட்சியில் பயன்படுத்தப்பட்டன? –
பாம்பு : களைப்பு, பாதுகாப்பு, சுகம், கவனமின்மை.
விவசாயி : சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை, கவனமின்மை, வன்முறை

கவனமின்மை இரு வரிசைகளிலும் வருகிறது. கவனமாய் இருப்பது யாருடைய பொறுப்பு? பெரும்சிக்கல் இல்லாத “தொடர்ந்து வாழ்தல்” என்ற எளிய இலக்கை மட்டுமே கொண்ட ஓர் உயிரினத்தினுடையதா? அல்லது தானே சிந்திக்கும் திறம் கொண்ட, சுற்றுபுறத்தை திட்டமிட்ட நடவடிக்கை மூலம் ஓரளவு கட்டியாள தெரிந்த உயிரினத்தினுடையதா?

நிலத்தை சரி செய்து கொண்டிருந்த விவசாயி, "பாம்பு இருக்கலாம், எனவே கவனத்துடன் பாம்பைக்கொல்லாமல், தன் வேலையை செய்ய வேண்டும்" என்ற எண்ணம் கொண்டவனாக இருப்பது அவசியமா? அல்லது "தெரியாத்தனமாக படுத்திருக்கும் பாம்பை மிதித்து விடுவேன் எனவே கவனத்துடன் வேலை செய்து, பாம்பைக்கண்டால், அதை வெட்டி எரிந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்"? என்று இருப்பது அவசியமா?

+++++

அதே விவசாயி அதே நிலத்தில் சிலகாலம் கழித்து உழுதுகொண்டிருந்தான். அவன் மனைவியும், இரு வயதே ஆன மகனும் கூட வயலுக்கு வந்திருந்தார்கள். மதியவுணவு உண்டபிறகு, விவசாயி உழுவதை தொடர்ந்தான். நிலத்துக்கு நடுவில் இருந்த மரத்தின் நிழலில், அவன் மனைவி மரத்தில் சாய்ந்து
உட்கார்ந்தபடியே உறங்கலானாள். பக்கத்திலேயே, விரிக்கப்பட்ட துண்டில் மகன் உறங்கிக்கொண்டிருந்தான். ஒரு பாம்பொன்று, குழந்தையின் காலுக்கு மிக அருகே ஊர்ந்துகொண்டிருந்தது. சடக்கென்று கண் விழித்த தாய் பாம்பை நோக்க, கையில் வைத்த தடியை வைத்து அடிக்க முயற்சிக்க, அது சரியாக பாம்பின் மேல் படவில்லை. பாம்பு அவ்விடத்திலிருந்து அகலுவதற்கு முன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் காலை கொத்திவிட்டுபோனது.

இந்த நிகழ்வை நோக்குமிடத்து, தாயின் தாய்ப்பாசம் மேலிட, பிழையான குறியுடன் குச்சி எரிந்து, பாம்பின் தற்காப்பு உணர்வை எழுப்பி, குழந்தையை கொத்தவைத்தது என்று கருத இடமுள்ளதல்லவா?.

+++++

சரியான வைத்தியம் சமயத்தில் கிட்டாததால், விவசாயியின் மகன் இறந்து போனான். மகன் இறந்த துயரத்தில், விவசாயி, விவசாயத்திலிருந்து கொஞ்ச காலம் விலகியிருந்தான். கிட்டத்தட்ட ஒரு வருடம், நிலத்தில் எதுவும் பயிரிடவில்லை. நிலம் கவனிப்பாரற்று, புற்களும் புதர்களும் பெருகின. பக்கத்து நிலத்தின் உரிமையாளன், விவசாயியை அணுகி "நீயோ பயிர் எதுவும் பண்ணவில்லை…உன் நிலத்தை எனக்கு விற்றுவிடேன்" என்று சொல்லவும், உறக்கத்திலிருந்து விழிப்பவன் போல "இல்லை…இல்லை…அது என் நிலம்…இந்த முறை பயிரிடலாமேன்றிருக்கிறேன்" என்று சொன்னான். விரைவிலேயே, சில குடியானவர்களை கூட்டிக்கொண்டு, தானும் நிலத்தில் மண்டிக்கிடந்த புதர்களை விலக்கி சீர் செய்ய வந்தான். நிலத்தை உழுவதர்க்கேற்றவாறு, தயார் செய்து முடித்தபோது, ஏறத்தாழ ஐம்பது பாம்புகள் இறந்திருந்தன.

உணர்ச்சி என்பது ஒற்றை உயிரினம் என்ற அலகில் நோக்கும்போது அளக்கத்தக்கதாய், அறவரைமுறைக்கு உட்பட்டதாய் இருக்கவேண்டும் என்ற கட்டாயப்போக்கு பொதுவாக நிலவிவருகிறது. அதுவே ஓர் உயிரினத்தொகுதி என்ற அலகில் நோக்கும்போது, இன்னொரு வலிய உயிரினத்தின் முன்னேற்றம் என்ற அளவுகோலில் அடங்கிப்போகிறது.

+++++

மூன்று வருடங்களுக்கு பிறகு விவசாயி அந்த நிலத்தை அடுத்த நில உரிமையாளனுக்கு விற்றான். நகரத்தில் இருக்கும் தன் அண்ணன் தொடங்கிய பட்டறையில் போய் வேலை செய்யப்போவதாகவும், மகளை நல்ல கல்லூரியில் சேர்க்க நகரவாசம் உதவும் என்றும், மகனின் நினைவுகளை மறக்க கிராமத்தை விட்டு விலகியிருப்பது உதவும் என்றும் தன நண்பர்களிடம் சொல்லிக்கொண்டான்.

விவசாயியிடம் நிலத்தை வாங்கியவரிடம் சிலர் வம்பு பேசினார்கள் – "மூன்று வருஷமாகவே, அவன் நிலத்தில் மகசூல் ரொம்ப கம்மி. எலித்தொல்லை மற்றும் பிற கொறிக்கும் பிராணிகளின் தொல்லை அதிகமாகவே ஆயிட்டுது. கெமிகல்ஸ் அது இதுன்னு யூஸ் பண்ணிப்பார்த்தான்யா..ஒண்ணும் முடியலே…"

"அதுக்கென்ன, நம்ம கிட்ட கோயம்புத்தூர் அக்ரிகல்ச்சர் யுனிவர்சிட்டி-ல படிச்ச மேனேஜர் இருக்காரே…கவலை எதுக்கு"

+++++

விவசாயியின் குடும்பம் ஊரை அடுத்த கோயிலுக்கு வெளியே இருந்த பாம்புபுற்றுக்கு பால் வைத்து படையல் செய்துவிட்டே கிளம்பிப்போனது.

+++++

Advertisement

1 Comment

  1. Kumar says:

    Dear Ganesh, the starting point is not well connected with the story, b’coz story starts after 2/3 paras…
    The narration is nice and with very few dialogues…The contradiction is, killing the first snake could be his carelessness…. killing 50 snakes is his revenge….. but worshipping at last is contradicting or we can consider, it is his fear that, at least his daughter should be safe, hence his prayer (padaiyal).

    Overall, you have given an impression that, you are walking towards sirukadhai ilakkiyam… Good luck and god bless you….

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.