மாற்றம்

அழகான வெள்ளை பறவை அது.
பூமியில் இருப்பது.
வானிலிருந்து வந்தது அல்ல!
இருப்பினும்
எல்லையில்லா எழில் நிறைந்தது.
நிறத்தின் கவர்ச்சி,
நாசியின் எடுப்பு,
குரலின் இனிமை
எல்லாமே கச்சிதம்.
பார்ப்பவர் மனம் மயங்கிபோகும்

பாவலர் சிந்தனை கவிதை புனையும்
கூண்டில் வசிக்கவில்லை அப்பறவை.
எல்லா கிராமங்களிலும் தண்ணீர் குடித்தது.
எல்லா காடுகளிலும் தானியம் கொத்தியது.
நகரங்களின் மாடிகளில் களைப்பாறியது.
குழந்தையின் சிரிப்பு,
கன்னியின் இளமை,

தாயின் பாசம்,
கலையின் அர்த்தம் –
இவைக்கும் இபபறவைக்கும்
வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை.
பறக்கும்போது அதன் அழகு
பலமடங்காய் கூடிப்போகும்.
ஆர்கெஸ்ட்ரா இசை போல
ஒரு கட்டுகோப்பாய்.
கரையைத் தாண்டாத நதி போல.

ஒரு கோட்டில் நகர்கிற எறும்பை போல.

ஆனாலும் ஒரு முட்டுக்கட்டை அதற்குண்டு.
குறிப்பிட்ட உயரத்தில் மட்டும் பறக்கும் விமானம் போல்
சில அடி உயரத்தில் மட்டுமே அது பறக்கும்.
காண்பவர் மனதை தன அபரிமிதமான அழகால்
கவர்ந்திழுக்கும் அப்பறவைக்கு

இந்த குறை நெடுநாளாய் வாட்டி வதைத்தது.

அண்ணாந்து பறக்கும் கழுகையும்,
இன்ன பிற பறவை இனத்து சகோதரர்களையும்
பார்த்து மௌனம் சாதித்து
பொறாமைப்படும்.

பின்னொருநாள் நகர்வலத்தின் பொது
ஒரு மயிலை சந்தித்தது.

“நூறு பச்சைக்கண் இறகுகளைகொண்ட
மாமயிலே, கடவுளரும் புராணத்தில்
உன்னை வாகனமாய் கொண்டனர்… ஆனாலும்
விண்ணை தொடும் பறக்கும் சக்தி
உன்னிடம் இல்லை..
சுவரிலிருந்து சுவருக்கும்
கிளையிலிருந்து கிளைக்கும்…

இவ்வளவுதான் உன் பறக்கும் சக்தி..
அழகும் கவர்ச்சியும் உண்டு உன்னிடத்தில்
ஆனால் பறக்கும் இயல்போ ஒரு கட்டுப்பாட்டிற்குள்…
ஏன் அப்படி? …
ஏனிந்தக் கேள்வி என்று யோசிக்காதே!
என் மனதை பல காலமாக அரிக்கும் கேள்விதான் இது.

உன்னைப்போல் எனக்கும் சில அடி தூரம் மட்டுமே பறக்க முடியும்
என்பது நீ அறிந்ததே”

முதிய மயில் தன்னுள் புன்னகைத்து
பதிலளித்தது.
“நான் பறக்க முயலவில்லை வெகு தூரம்
இயற்கையின் எல்லையை மீறுதல்
நன்றன்று என்று இருந்துவிட்டேன்..

எழில் பறவையே…
அறிவுரைகள் உன் நெஞ்சத்து ஏக்கத்தை போக்காது..
சர்வ வல்லமையும் வாய்ந்த
சாமியார் ஒருவரை நான் அறிவேன்…
அவரிடம் நான் உன்னை அழைத்துபோவேன்..”
மயிலுடன் பறவை முனிவரை சந்தித்தது.

முனிவர் ஒரு மந்திரத்தின்

வாயிலாக மிக உயரம் பறக்கும்
சக்தியை பறவைக்களித்தார்.

சிலநிமிடங்களில் வானத்தை தொட்டது பறவை…
பூமியின் மேல் பல்லாயிரம் அடி தூரத்தில் பறந்தது….
மின்னல்வேகத்தில் பலகாத தூரத்தைகடக்கும் குஷி
வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.

புதுபிறவி எடுத்தது போன்ற புது வேகம்.
நினைத்தவுடன் நினைத்தே இடத்தில…
மனித இடையுறுகளே இல்லாத வானவெளியில்
சுதந்திரத்தின் முழு அர்த்தம் புரிகிறது.

கணத்தில் சீதோஷ்ண மற்றம்…எந்த அறிவிப்பும் இல்லாமல்…

குளிர்…கடும் குளிர்…வலிமையான காற்று
சிறகுகள் உதிர்ந்தன…

காது மடங்கிபோனது…
நிறம் மங்கிப்போனது…

பறக்கும் ஆனந்தத்தை சிலவாரம்
அனுபவித்த பிறகு பூமியை தொட்டது பறவை.

மரக்கிளைகள், புல்வெளிகள் , சமவெளிகள், மலையுச்சிகள்,
அருவிகளினோரம், நதிக்கரைகள்,
கட்டிட மாடிகள், பள்ளி மைதானங்கள்,

எங்கும் யாரும் பறவையை அடையாளம்கண்டு கொள்ள முடியவில்லை.
“மங்கிப்போன நிறமா? அமுங்கிப்போன மூக்கா? குட்டியான காதா?
மாறிப்போன குரலா? எது?
ஏன் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை?
மிகவும் கருத்த புறா என்றோ ? ஓரளவு வெண்மையான காகம் என்றோ என்னை எண்ணுகிறார்களோ?

என் இனத்தில் நான் ஒற்றையாகப் பிறந்தேன்.
எனக்கென சொந்தமும் இல்லை?
என் பறவை இனத்தின் கடைசி உறுப்பினனாய் இருந்தேன்.
உயரப்பறக்கும் ஆசையினால் என் இனத்தின் அடையாளத்தை தொலைத்துவிட்டேன்.”

சொல்லொணாக்குழப்பம் பறவையின் நெஞ்சில்.

முனிவரின் ஆசிரமத்திற்கு மீண்டும் பயணம்.

முனிவர் பறவையை நொடியில் கண்டுகொண்டார்.

“உயரப்பறக்கும் உன் நீங்காத ஆசை நிறைவேறியதா?”

“ஆம். முனிவரே!
ஆனால் திரும்பி வந்தால் யாரும் என்னை அடையாளம்

கண்டுகொள்ள வில்லை.
ஒரு நீரோடையில் என் முகத்தை பார்த்தேன்.
முழுக்க மாறி இருக்கிறது.
பறக்கும் வரம் தந்த முனிவரே
என் பழைய அடையாளத்தை திருப்பித்தர முடியுமா?”

முனிவர் வரட்சியான புன்னகையை வீசினார்.

“நீ வேண்டுவது என்ன? எது வேண்டினாலும்
மாறாமல் அதையே வேண்டு… இல்லையெனில்…குழப்பம்தான்..

பறக்கும் திறமையை அளிக்க முடிந்த எனக்கு
நீ சந்திக்கக்கூடிய சூழலை மாற்றும் சக்தி கிடையாது..
ஏனென்றால் அது ஒவ்வொரு படைப்பும் தானாகவே

தெரிவு செய்துகொள்ளும் அம்சமாகும்.
அழகியல் சார்ந்த படைப்பான நீ சரியான சூழ்நிலையில்தான் வாழ்ந்திருக்கிறாய்.
உயரப் பறக்கும் பறவையின் குணாதிசயங்கள் மற்றும் அங்க அமைப்புக்கள்
அவற்றிற்கு ஏற்றவையாய் இருக்கும்… அதைதான் நீ இப்போது அடைந்திருக்கிறாய்… ”

முனிவரின் வார்த்தை கேட்டு
மதி மயக்கத்துடன் திரும்பிய பறவைக்கு
குழப்ப நிலை…திசை தெரியாமல் பூமியில் சுற்றியது…
பிறகு கவலையை மறக்க…பறக்க ஆரம்பித்தது…
வெகு உயரத்தில்…..பறப்பதின் நுணுக்கங்களை அறிந்தது அனுபவம் வாயிலாக..

சில காலத்தில்…பூமியில் வாழ்ந்த அடையாளத்தை முற்றிலுமாக இழந்தது….

அவ்வப்போது குஞ்சுபொரிக்க மட்டுமே தரைக்கு வரும்
தரையில்லாகுருவியின் முன்னோராக இப்பறவையை சொன்னார்கள்

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.